மிக சுவாரசியமான நீர் விளையாட்டுகளில் ஒன்று அலைச்சறுக்கு. சுமார் 9 அடி நீளம் கொண்ட தக்க பலகையை காலில் கட்டிக்கொண்டு சீறும் அலைகள் மீது நின்று தங்கள் பொழுது போக்குக்காக சறுக்கி விளையாடுவதாகும். இது உலக அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த விளையாட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அலை சரக்கு விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு அனைத்து உறுப்புகளும் சீராக வேலை செய்யும். உடல் இறுகும். தொப்பை குறையும். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
கரையோடும் நுரையோடும்...
நீண்ட கடற்கரையும் ஏராளமான கடற்கரைகளையும் கொண்ட நமது நாட்டில் கடல் அழகை காண்பதற்கும், ரசிப்பதற்கும் செல்லும் பலரது அனுபவம் அலை நுரையோடும், மணல் கரையோடும் முடிந்து போகும். மீன்பிடித்தல், முத்துக்குளித்தல் என்பதோடு சிலரது கடல் வாழ்வு முடிந்து போகிறது. கடல் அலையை பார்த்தாலே பயத்தில் கற்சிலை போல் உறைந்து போகும் பலருக்கு மத்தியில் ஐந்து அடி உயரத்திற்கும் அதிகமாக எழுந்திருக்கும் அலையில் பயணித்து அந்த அழகான அலையின் நுனிக்கு மேல் தாவி, பல்டி அடிப்பதும், 360 டிகிரி கோணத்தில் சிறிது நேரம் நிற்பதும், மீண்டும் அதே அலையில் குதித்து பாம்பு போல் வளைந்து, நெளிந்து பயணிப்பதும், சாகசம் செய்வதும் கண்கொள்ளா காட்சிகளாகும்.
விளையாடுவது எப்படி?
அலைச் சறுக்கு விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்ற வீரர்களைப் போல ஆடம்பரமான உடைகளை அணிய தேவையில்லை. எளிதில் உலரக் கூடியதாக இருந்தாலே போதும். வீரர்கள் பயன்படுத்தும் மிதவை ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் பச்சை நிற உடை அணிவது தேடுவதற்கும் மீட்பதற்கும் ஏதுவாக இருக்கும். கட்டாயம் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். காற்றின் திசை, நேரம், வேகம், அலைகள் என கடலை பற்றியும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அலையின் வளைவுப் பகுதியை ஒட்டியே அலைச்சறுக்கு செய்ய வேண்டும் எல்லா அலைகளையும் ஒருவரே மறைக்கக்கூடாது. சறுக்கு பலகையை தன்னுடன் காலில் இணைத்துக் கட்டி இருப்பதால் வீரர்கள் கடல் நீரில் பயணிக்கும் போது சில நேரங்களில் அது கழுன்றுவிடவும் வாய்ப்பு உள்ளது. பாறை, மணல் திட்டு, பனிக்கட்டிகளில் மோதும் அபாயம் உண்டு.
பிரமிக்கும் சாகசங்கள் ...
இந்தியாவைப் போன்று இலங்கையும் அழகிய கடற்கரையை கொண்ட நாடு மட்டுமல்ல அலைச்சறுக்கு விளையாட்டுப் போட்டிக்கு பெயர் பெற்றதாகும். அந்நாட்டிலுள்ள அறுகம்பை கடல் பகுதியில் சீறிப்பாயும் அலைகளுக்கு மத்தியில் அலைச்சறுக்கு போட்டிகளில் பங்கேற்று சாகசம் செய்வதை பார்த்து ரசிப்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது. பிரமிக்க வைக்கிறது.
மிரட்டும் மீனவர் குழு...
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், வெனிசுலா, இஸ்ரேல், அமெரிக்கா, நியூசிலாந்து, மெக்சிக்கோ, ஸ்பெயின், பிரிட்டன், பிரேசில், தென்னாப்ரிக்கா, கோஸ்டரிகா, அர்ஜென்டினா, அயர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்றன. இவற்றில் இலங்கை, இந்தியா, மாலத்தீவு ஆகிய நாடுகள் மட்டுமே தெற்கு ஆசியாவில் இருந்து கலந்து கொண்டன. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற 6 பேர் கொண்ட குழுவில் இடம் பிடித்த அனைவரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கோவளம் மீனவ கிராமத்து இளைஞர்கள்.
உலக சாம்பியன்கள் மற்றும் அதற்கு சமமான திறமை உடையவர்களும் கலந்துகொண்ட இந்த சர்வதேச போட்டியில், மீனவக் குடும்பத்தில் பிறந்து, உப்புக் காற்றை சுவாசித்து கடல் அலைகளுடன் விளையாடிய உலக அளவில் பேசப்படும் நபராக மாறியிருக்கும் மூர்த்தி இந்திய அணிக்கு தலைமையேற்றது அவருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெருமையாகும்.
யார் இவர்?
சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள கோவளம் அடிப்படையில் ஒரு மீனவ கிராமம் இருப்பினும் அது கடற்கரை கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றதாகும். இந்த கடற்கரை மீனவ கிராமத்தில் ஒரு ஏழை மீனவர் குடும்பத்தில் பிறந்தவர் மூர்த்தி. அப்பா மேகவணன். அம்மா சுந்தரி. இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை பிரிவில் முடிந்தது. ஏழ்மையின் காரணமாக சகோதரி மற்றும் அம்மாவையும் கரை சேர்க்கும் சுமை சிறுவயதிலேயே சுமக்க வேண்டியிருந்தது. இதனால் ஆறாம் வகுப்பை தாண்ட முடியவில்லை. பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததால் மீன்பிடித் தொழில் அவருக்கு அத்துப்படியானது.
உலக அளவிலான அலைச்சறுக்கு போட்டிகளில் பங்கேற்று விளையாடிய அனுபவம் பெற்றவர். 2013-14 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் தேசிய அளவில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தையும் பதக்கங்களையும் குவித்து முதலிடத்தை பிடித்தவர்.
திருப்பங்கள்...
கடல்தான் வாழ்க்கை என மாறிவிட்ட மூர்த்தி, கோவளம் கடற்கரையின் கடல் அலைகளில் 18 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண மறக்கதவை கடலில் மிதக்க விட்டு விளையாடிய சாகசங்களை பார்த்து வியந்த அமெரிக்காவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஜாக் ஹெப்னர். அவரது சறுக்கு பலகையை கடனாக கொடுத்தது வாழ்க்கையில் திருப்பத்தை கொடுத்தது.
பிறகு, 2008 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் அலைச் சறுக்கு விளையாட்டு வீரரும் இசைக் கலைஞருமான யோத்தமை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த நட்பின் மூலம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அத்துடன் மூர்த்தி பற்றிய குறும்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார்.
மேலும், உலக நாடுகளில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதில் கிடைத்த தொகையில் 30 படகுகளை அன்பளிப்பாக வழங்கியதும் மூர்த்தியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது.
ஊர் கூடி கொண்டாட்டம்!
சிறுக சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு சுமார் 1,500 ரூபாய் மதிப்புள்ள அலைச் சறுக்கு பலகை சொந்தமாக வாங்கி பயிற்சி எடுத்த போது கிராமத்தில் பலரும் இவரை கேலி, கிண்டல் செய்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் புறம்தள்ளி இலக்கை நோக்கி பயணித்த அவரை ஊரே கொண்டாடுகிறது.
உற்சாகம்...
2012 ஆம் ஆண்டு ‘கோவ்லாங் பாயிண்ட் சர்ஃபிங் பள்ளி’ (அலைச்சறுக்கு விளையாட்டு பயிற்சி) துவங்க முன்னாள் அமைச்சர் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் பேரனும் கடல் பிரியமான டி.டி. குரூப் நிறுவனத் தலைவர் அருண் வாசு உதவி செய்திருக்கிறார். இங்கு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு பணம் இலவசமாக கற்றுத்தருகிறார். ஏராளமானோர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இந்தப் பயிற்சி மையத்தின் சார்பாக சர்வதேசப் போட்டிகள் 7 முறை நடத்தப்பட்டுள்ளது. 30 படகுகளை கொண்டு, ஏளனம் பேசிய கிராம இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தார். இதன் மூலம் பயிற்சி பள்ளி துவங்க வேண்டும் என்ற மூர்த்தியின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது.
கிராமத்து மொழியில்...
மூர்த்திக்கும் கடலுக்கும் உள்ள உறவை கண்டு ஆச்சரியப்பட்டு இந்த பயிற்சி மையத்திற்கு வந்த கடலோர காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு கடல் சாகசங்களை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு மூர்த்தியிடம் சில நாட்கள் பயிற்சியும் எடுத்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து காவல் படையைச் சேர்ந்த பலருக்கும் கடலும் கடல் சார்ந்த பயணத்துடன் நீச்சல் அலைச்சறுக்கு விளையாட்டு, சாகசங்கள் குறித்து வகுப்புகள் எடுத்திருக்கிறார். பல கல்லூரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவருக்குத் தெரிந்த கிராமத்து மொழியிலேயே வகுப்பு எடுக்கிறார். காவல்துறை அதிகாரி மட்டுமல்ல கிரிக்கெட் பிரபலங்களான ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், தமிழகத்தின் முரளிவிஜய், திரைத்துறையில் நடிகர் ஆர்யா, ஓவியா என ஏராளமானோர் இந்த பயிற்சி மையத்திற்கு வந்து அலைச்சறுக்கு விளையாடியிருக் கிறார்கள். மீனவ கிராமத்தில் பிறந்து ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் சமூக சேவைகள் செய்துகொண்டே நீர் விளையாட்டிலும் அலைச்சறுக்கு போட்டிகளிலும் உலக அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் மூர்த்தியை அனைவரும் வாழ்த்துவோம்!.